Friday, June 20, 2008

குருவி படத்தின் மீது ஏன் இந்த கொலைவெறி - பிரமிட் சாய்மீராவுக்கு வேண்டுகோள்

சமீபத்தில் வெளியான குருவி படம் பற்றி ஒரு மோசமான மனோபாவம் குறிப்பிட்ட சில ரசிகர்களிடமும், சில வலைப்பதிவர்களிடம் நிலவுகிறது. குருவி படம் என்னவோ இதுவரை தமிழில் வந்த திரைப்படங்களிலேயே மட்டமான படம் என்பது போல் ஒரு தோற்றத்தை நிறுவ ஒரு கூட்டம் இரவு பகலாக கண் விழித்து ரூம் போட்டு யோசித்துக் கொண்டு இருக்கிறது. இன்னும் துக்ளக் கார்ட்டூன் வராதது தான் பாக்கி

குருவி படம் கில்லி அளவுக்கு வெற்றி பெறவில்லை என்பது உண்மைதான். ஆனால் அதற்கு கிடைத்த வரவேற்பை ஏற்றுக் கொள்ள சிலருக்கு மனம் இடம் கொடுக்க. அதனால் அவர்கள் திட்டமிட்டு குருவி படத்துக்கு எதிரான பிரச்சாரத்தை முடுக்கிவிட்டுள்ளனர். குருவி படத்துக்கு முன் வெளிவந்த இளைய தளபதியின் முந்தைய படத்துக்கும் மறுபட்ட விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் அப்போது எல்லாம் தென்படாத கொலைவெறி குருவி படத்துக்கு மட்டும் இவர்களுக்கு வந்து இருக்கிறது என்பதே இது ஒரு சதிவலை என்பதற்கான ஆதாரம். குருவி படம் வெளிவந்த முதல் வாரத்திலேயே சிலர் படத்தை பார்த்துவிட்டு விமர்சனம் செய்து இருந்தார்கள். இந்த விமர்சனங்கள் வரவேற்கப்பட வேண்டியவை. ஏனெனில் இவர்கள் எந்த பேதமும் இல்லாத சினிமா ரசிகர்கள். ஆனால் இப்போது இணையம் மற்றும் மின்னஞ்சல் பிரச்சாரம் நிச்சயம் ஒரு சதி வலை.

இதற்கு எல்லாம் காரணம் என்ன என்று விளக்க தேவை இல்லை. தலைவர் கலைஞர் அவர்களின் குடும்பத்தில் இருந்து மேகும் ஒருவர் கலைத் துறையில் வெற்றி பெற்றுவிடக்கூடாது என்று இவர்கள் மனப்பால் குடிக்கிறார்கள். இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க பிரமிட் சாய்மீரா நினைத்தால் முடியும். தசாவதாரம் படத்தின் வசூல் 100 கோடி என்று தங்கள் வலைப்பூவில் செய்தி வெளியிட்ட பிரமிட் சாய்மீரா குருவி படத்தின் வசூல் பற்றியும் செய்தி வெளியிட்டால் இந்த கொலைவெறி கூட்டத்தின் பிரச்சாரத்துக்கு சாவு மணி அடிக்கப்படும்

Thursday, June 19, 2008

தினமலரில் “கலைஞர்”

தினமலர் பத்திரிகை எப்போதுமே திராவிட தலைவர்களை இழிவுபடுத்தும் விதமாக ஈ.வெ.ராமசாமி, அண்ணாதுரை என்றுதான் செய்திகளில் பெயர்களை வெளியிடும். பெரியார் என்றோ, அறிஞர் என்றோ சொன்னால் தினமலருக்கு தீட்டு விழுந்துவிடுமாம். ஆனால் இராஜகோபாலாச்சாரியை இராஜாஜி என்றும், சங்கராச்சாரியாரை பெரியவர் என்றும் எழுதும். தினமலரின் ஐம்பதாண்டு வரலாற்றில் கருணாநிதி என்ற சொல் இல்லாமல் தினமலர் வந்ததாக வரலாறே இல்லை. கலைஞர் என்ற சொல்லை தினமலரில் தடையே செய்திருப்பார்கள் போலிருக்கிறது.

இன்று தினமலர் இணையத்தை மேய்ந்தபோது ஒரு அதிசயம், அவர்களுக்கே தெரியாமல் “முதல்வர் கலைஞர்” என்ற சொல்லை பயன்படுத்தியிருக்கிறார்கள். அது தொடர்புடைய ஸ்க்ரீன் ஷாட் கீழே.



Wednesday, June 18, 2008

கூட்டிக்கொடுக்கும் கலைஞர்

"அரசு ஊழியர்களுக்கு ஊதியத்தைக் கூட்டிக்கொடுத்த கலைஞர்.
ஏழைப்பெண்களுக்கு திருமண உதவித்தொகையைக் கூட்டிக்கொடுத்த கலைஞர்.
காவலர்களின் அரை டவுசரை முழு டவுசராக கூட்டிக்கொடுத்த கலைஞர்.
சத்துணவில் முட்டையைக் கூட்டிக்கொடுத்த கலைஞர்.
வேலையில்லா படித்த இளைஞர்களுக்கு உதவித்தொகையைக் கூட்டிக்கொடுத்த கலைஞர்.
இந்திய அரசில் அமைச்சர் எண்ணிக்கையை கூட்டிக்கொடுத்த கலைஞர்."

இப்படித்தான் கூட்டிக்கொடுக்கும், அள்ளிக்கொடுக்கும் கலைஞரை எங்களுக்குத் தெரியும்.கூட்டிக்கொடுத்த கருணாநிதி, மாமா வேலை பார்க்கும் கருணாநிதி என்று வாய்க்கு வந்த படி பேசும் மக இக தோழய்ங்களா, உங்கள் இயக்கத்தில் இருக்கும் மூன்று கோடி உறுப்பினர்களும் சேர்ந்து ஜெயலலிதாவின் சுண்டு விரலையாவது அசைக்க முடியுமா என்று எண்ணிப்பார்க்க வேண்டுகிறேன்.நீங்கள் கனவு மட்டுமே காணும் பல விசயங்களை நனவாக்கிக்காட்டுபவர் கலைஞர் மட்டுமே என்பது ஏன் உங்கள் மரமண்டைக்குப் புரிய மாட்டேன் என்கிறது?.ஓட்டுப்பொறுக்கி அரசியல் என்று எல்லோரையும் சகட்டுமேனிக்கு திட்டும் மக இக தோழய்ங்களா, இந்தியாவை ஆயுதப்புரட்சியின் மூலம் கைப்பற்ற முடியும் என்று நிஜமாகவே எண்ணுகி்றீர்களா?.மலையில் முட்டினால் மண்டை தான் உடையும். இந்திய அரசை ஆயுதப்புரட்சின் மூலம் அகற்றி விட்டு அதிகாரத்தை கைப்பற்றினால் மட்டு்மே மக்களுக்கு உங்களால் சேவை செய்ய முடியுமா?

உலகின் தலைசிறந்த ஜனநாயக நாடுகளே பார்த்து வியக்கும் வண்ணம் தானே இந்தியாவும் இருக்கிறது.இதை விட அமைதியான , பாதுகாப்பான சூழல் வேறெங்கும் இல்லை. ஒடுக்கப்பட்ட, ஏழைமக்களின் முன்னேற்றத்திற்கு இப்போது இருக்கும் சூழலே மிக நன்றாக உள்ளது.(இலங்கைத்தமிழர்களின் நிலையை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்). இருக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்வதை விட்டுவிட்டு பகல்கனவு காண்பதால் என்ன நன்மை?

முழுமையான மனிதாபிமானமே கம்யூனிசம் என்று மூன்றே வார்த்தைகளில் விளக்கம் சொன்னார் லெனின். கலைஞருக்கு மேலாகவா நீங்கள் ஒரு மனிதாபிமானியைக் கண்டு விடப்போகிறீர்கள். முற்போக்கு சிந்தனைகளுக்கு செயல் வடிவம் கொடுத்துக்கொண்டிருக்கும் கலைஞருக்கு ஆதரவு தர மனமில்லையென்றாலும் வாரி விடாமலாவது இருங்கள்.

மாமா வேலை பார்க்கும் அரசு என்றால் என்ன? பெரு முதலாளிகள் சம்பாதிப்பதற்கு சாதாரண மக்களின் நலன்களை பலிகொடுத்து முதலாளிகளின் ஏஜெண்டாக , மாமாவாக வேலை பார்ப்பது என்பது தான். ஆனால் அசுரரே, நாம் விரும்பினாலும்,விரும்பாவிட்டாலும் உலகில் மாற்றங்கள் வெகுவேகமாக நடந்தேறிக்கொண்டிருக்கின்றன. மாற்றங்களுக்கேற்றவாறு நம்மை மாற்றிக்கொள்ளாவிட்டால் காணாமலே போய்விடுவோம்.

சோசலிச சமூகத்திற்கு அவசிய முன்தேவையாக முதலாளித்துவ வளர்ச்சி இருக்கிறது என்று மார்க்ஸ் சொன்னதை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். இப்போது நிலவி வரும் சூழலை ஏழை,எளிய மக்கள் எப்படி பயன்படுத்திக்கொள்ளலாம் என்று சிந்தித்து பாடுபடுவதே அனைவருக்கும் நன்மை பயக்கும்.

உடன்பிறப்பே, நல்ல செய்தி வந்தேவிட்டது.. !

அமர்க்களமாக நடந்து முடிந்துள்ளது கழக மகளிர் அணி மாநாடு. கடலூரையே கலக்கிய மாநாட்டின் வெற்றி செய்தி வந்துவுடன் அடுத்த நல்ல இனிய செய்தி கழகத்தினர் அனைவருக்கும் கிடைத்திருக்கிறது.

அது தான் பா ம க கூட்டணியில் இருந்து நீக்கப்பட்டது.

கழக உயர்நிலைக்குழு கூடி பா ம க வை தமிழக கூட்டணியில் இருந்து விலக்கி உள்ளது, உள்ளபடியே நம் அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தி.

நட்பு, கூட்டணி என்று சொல்லிகொண்டே, கழக உடன்பிறப்புக்களுக்கு எதிராக செயல்பட்டதும், கழக அரசை அனைத்து விஷயங்களிலும் குறை சொல்லிக்கொண்டும், தலைவரின் அனைத்து அரசியல் முடிவுகளுக்கும் நக்கல் செய்துக்கொண்டும், நல்ல திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட்டும் மலிவான அரசியல் நடத்தி விளம்பரம் தேடிக்கொண்ட டாக்டர் கொய்யா.. அய்யா வின் பா ம க எப்போதோ விலக்கப்பட்டிருக்க வேண்டிய கட்சி.. லேட்டான முடிவு என்றாலும் தலைவர் லேட்டஸ்ட்டான முடிவு எடுத்துள்ளார். நிச்சயம் மருத்துவர் ஆடித்தான் இருப்பார்.


அவருக்கு என்ன 3 வருடத்துக்கு ஒரு கூட்டணியில் இருப்பார்.. அடுத்து ஓடிப்போய் அம்மாவுடன் சேருவார்... உடனடியாக இருக்காது. ஏனெனில் அன்புமனியின் பதவி போய்விடுமே.. 2009 பாராளுமன்ற தேர்தலில் ஓடிவிடுவார்.. ஓடட்டும்..

.... வலம் போனால் என்ன., இடம் போனால் என்ன, மேலே விழுந்து புடுங்காமல் இருந்தா சரி..



Thursday, June 12, 2008

டாக்டர் கலைஞர்: கடலூரில் விழாக்கோலம்

டாக்டர் கலைஞர்: கடலூரில் விழாக்கோலம்

கடலூரில் விழாக்கோலம்



தி மு க வின் இளைஞர் அணி மாநாட்டை தொடர்ந்து இதோ தி மு க வின் மகளிர் அணி முதல் மாநாடு கடலூரில் சனிக்கிழை நடைப்பெற உள்ளது.


கடலூரே விழாக்கோலம் பூண்டுள்ளது. சனிக்கிழமை மாலை நடைபெறும் மகளிர் பேரணியை தனி மேடையில் இருந்து தலைவர் பார்வையிடுகிறார்.
தலைவர் கலைஞரின் வருகையை மகளிரணியினருடன் , கடலூர் மாவட்டமே வழி மேல் விழி வைத்து காத்த்திருக்கிறது.


இந்த மாநாடு, அனைத்து வகையிலும் மாபெரும் வெற்றிபெற்று, தி மு க வரலாற்றில் மேலும் ஒரு சாதனை படைக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

மாநாடு குறித்து தலைவரின் அறிக்கையில் ஒரு பகுதி


மூடத்தனத்தின் முடை நாற்றம் வீசுகின்ற காடு மணக்க வரும் கற்பூரப்பெட்டகமே, வேண்டாத சாதி இருட்டு வெளுப்பதற்குத் தூண்டா விளக்காய் துலக்கும் பெருமாட்டி புண்ணிற் சரம் விடுக்கும், பொய்மதத்தின், கூட்டத்தை க்ண்ணிற் கனல் சிந்திக் கட்டழிக்க வந்தவனே என்ற புரட்சிக்கவிஞரின் பாடலை ஓங்கி ஒலித்து மாதர் கூட்டத்தை அழைக்கிறேன் வா ! வா! மகளிர் மாநாட்டுக்கு
அரசியல் அறிவு மட்டுமல்ல, சமுதாய உணர்வும் பெற்றிட இந்த மாநாடு மலை முகட்டில் ஏற்றி வைக்கும் விளக்கென அமையட்டும்.

என் தங்கைகள் கடலென கூடும் கழக மங்கையர் மாநாடு, வாரீர் , வாரீர்.

மாநாடு முடிந்தவுடன் வழக்கம் போல, சில சோமாறி பத்திரிக்கையாளர்கள் வயிற்றெரிசலில் புலம்பித்தள்ளுவார்கள். சில வலைப்பதிவர்களும் தங்கள் பங்குக்கு குமுறுவார்கள், அங்கலாயத்து போய், அது இது என்று தங்கள் வலைப்பூவில் பதிவாகவும், மற்றும் பின்னூட்டங்களாகவும் கொட்டித்தீர்ப்பார்கள்..

உங்கள் அனைவருக்கும் ஒன்றே ஒன்று.. இப்போதே மருந்துக்கடைகளில் அனுகி ஜெலூசில் வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். மாத்திரையை விட பாட்டிலில் வரும் ஜெலுசில் மருந்து நன்றாக உள்ளது என்று கேள்வி..

மாநாட்டு வெற்றிச்செய்தியுடன் உங்கள் அனைவரையும் மீண்டும் சந்திக்கிறேன்..

நன்றி


Tuesday, June 03, 2008

ரஜினி சொன்ன குட்டிக்கதை!

இந்த கதை நடந்து கிட்டத்தட்ட அறுபது ஆண்டு காலம் இருக்கலாம். காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை, காலில் சக்கரம் கட்டிக்கொண்டு ஓடிக்கொண்டே இருக்கிறது. கூடவே சரிக்கு சமமாக ஓடுபவர்கள் அதிர்ஷ்டசாலிகள். பாதியிலேயே ஓடமுடியாமல் நின்றுவிடுபவர்கள் பாவம். சில பேர் மட்டும் காலத்தின் கால் சக்கர வேகத்தையும் கடந்து ஓய்வு ஒழிச்சலின்றி ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். வரலாறு இவர்களை தான் தன் செல்லப்பிள்ளையாய் தத்தெடுத்துக் கொள்கிறது.

அந்த இரு இளைஞர்களும் இருபதுகளில் இருக்கிறார்கள். எளிமையான தோற்றம். கிராமத்து வாசனை கிஞ்சித்தும் மாறவில்லை. கண்களில் மட்டும் எதிர்காலம் குறித்த ஒரு லட்சம் வாட்ஸ் ஒளி. மெரினா கடற்கரை சாலையில் மகிழ்வாக பேசியபடியே நடக்கிறார்கள். அடுத்த ஐம்பதாண்டுகளுக்கு அவர்களிருவருமே மறந்திருக்க முடியாத மாலை அது. நம்பிக்கையை தவிர்த்து வேறெந்த சொத்து, சுகமும் இல்லாதவர்கள் இருவரும்.

“நண்பா! நம்பிக்கை இருக்கிறது. எப்படியும் ஒரு நாள் இந்த கடற்கரையே என்னை திரும்பிப் பார்க்கும் அளவுக்கு வளருவேன்!”

“நிச்சயமாக நண்பா. நம் சாதனை சாமானியர்களுக்கும் வாழ்க்கை குறித்த நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்!”

“இதே கடற்கரைச் சாலையில் எனக்கு ஒரு சிலை வைக்கப்படும் அளவுக்கு நான் முன்னேற வேண்டும்”

“அந்த சிலையை வைக்கும் அதிகாரத்தில் நான் அமரவேண்டும்”

அந்த நண்பர்களின் வேடிக்கை பேச்சு அரைநூற்றாண்டு கழித்து நனவாகியது. சென்னை கடற்கரை சாலையில் செவாலியே சிவாஜி கணேசன் அவர்களுக்கு சிலை வைக்கப்பட்டது. சிலையை வைத்தவர் தமிழாய் வாழும் தமிழக முதல்வர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர். இந்த கதையை சிவாஜி சிலை திறப்பு விழாவில் சொன்னவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

நடிகர் திலகத்தின் ஆசையை நிறைவேற்றியது மட்டுமல்ல, இன்னும் பல கோடி தமிழர்களின் ஆசைகளையும் தலைவர் கலைஞர் நிறைவேற்ற வேண்டியிருக்கிறது. இதையெல்லாம் செய்ய இன்னும் கூட ஒரு நூறாண்டு போதாது. தமிழ் போல காலமெல்லாம் வாழ்ந்து இயற்கையை வென்று தமிழர்களுக்காக கலைஞர் உழைக்க, வாழும் தமிழ் பிறந்த தினமான இன்று தமிழன்னையை வேண்டுவோம்.

Monday, May 26, 2008

சென்னையில் ‘கலைஞர் 85' கொண்டாட்டம்!

31.5.2008 அன்று, சென்னை-சேப்பாக்கம், கலைவாணர் அரங்கில், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை, மாண்புமிகு தமிழக முதல்வர் கலைஞர் அவர்களின் 85வது பிறந்த நாளை முன்னிட்டு, “கலைஞர் 85 கொண்டாட்டம்” பல்வேறு சிறப்பு நிகழ்ச்கிகளாக நடைபெறுகிறது.

மாலை 4.00 மணிக்கு - ராம்ஜி குழுவினர் வழங்கும் ”கலைஞர் வாழியவே” என்ற நிகழ்ச்சியும், மாலை 5.00 மணிக்கு உலகப் புகழ் ட்ரம்ஸ் சிவமணி வழங்கும் “கலைஞர் -மக்கள் இசையே” நிகழ்ச்சியும், மாலை 6.00 மணிக்கு - பேராசிரியர் திரு பெரியார்தாசன் அவர்கள் வழங்கும், “கலைஞருக்கு நிகர் கலைஞரே” என்ற நிகழ்ச்சியும், இரவு 8.00 மணிக்கு - கலைஞர் டிவி ”எல்லாமே சிரிப்புதான்” குழுவினர் வழங்கும் ”சாதித்தது யாரு? சாதிக்கப்போவது யாரு?” என்ற நிகழ்ச்சியும், இரவு 9.00 மணிக்கு - “கலைஞர் - சாதனை ஆட்சியே” என்ற குறுந்தகடு வெளியீடு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சி, மாண்புமிகு செய்தித் துறை அமைச்சர் திரு பரிதி இளம்வழுதி அவர்களின் தலைமையில் நடைபெறுகிறது. மாண்புமிகு சட்டப் பேரவைத் துணைத் தலைவர் திரு வி.பி.துரைசாமி வரவேற்புரையாற்றுகிறார். மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் ஆ.தமிழரசி, மாண்புமிகு மீன்வளத் துறை அமைச்சர் திரு கே.பி.பி.சாமி, மாண்புமிகு பால்வளத் துறை அமைச்சர் திரு உ.மதிவாணன், செயலாளர் திமுக விவசாயிகள் அணி திரு கே.பி.ராமலிங்கம், வடசென்னை மாவட்ட செயலாளர் திரு எல்.பலராமன், தென்சென்னை மாவட்ட செயலாளர் திரு ஜெ.அன்பழகன், சேப்பாக்கம் பகுதிச் செயலாளர் திரு சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

மாண்புமிகு நிதி அமைச்சர் திருமிகு பேராசிரியர் அவர்கள் விழா துவக்க உரையாற்றுகின்றார். மாண்புமிகு மின் துறை அமைச்சர் திருமிகு ஆற்காட்டார் அவர்கள் விழா சிறப்புரையாற்றுகின்றார். விழா இறுதியில், முன்னாள் அமைச்சரும், திமுக ஆதி திராவிடர் நலக் குழு செயலாளருமான திரு ச.தங்கவேல், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மீனவர் அணி செயலாளருமான திரு இரா. பெர்ணார்ட், திமுக விவசாய அணி செயலாளர் போடி திரு முத்து மனோகரன், மீனவர் அணி செயலாளர் இராயபுரம் திரு நற்குணம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், திமுக ஆதி திராவிடர் நலக் குழு செயலாளருமான திரு வி.பி.ராஜன், விவசாய தொழிலாளர் அணி திரு நன்னிலம் மணிமாறன் ஆகியோர் நன்றியுரையாற்றுகின்றார்கள்.

நிகழ்ச்சிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளையும், தி.மு.கழக ஆதி திராவிட நலக் குழு, மீனவர் அணி, விவசாய அணி, விவசாய தொழிலாளர் அணிகள் செய்து வருகிறது. மேற்கண்ட “கலைஞர் 85 கொண்டாட்டம்” நிகழ்ச்சிக்கு, தி.மு.க.வின் அனைத்து அணியினரும், பொதுமக்களும், மாணவ-மாணவிகளும் வருகைபுரிந்து, நிகழ்ச்சியினை சிறப்பித்துத் தருமாறு, திமுகவின் துணை பொதுச்செயலாளரும், மாண்புமிகு செய்தித் துறை அமைச்சருமான திரு பரிதி இளம்வழுதி அவர்கள் அன்புடன் அழைக்கின்றார்கள்.

Friday, May 23, 2008

துண்டிக்க முடியுமோ உடன்பிறப்புகளை?

முத்தமிழ் வித்தகராம் நல்லோர்க்கும்
முதுபெரும் புலமையில் வல்லோர்க்கும்
முரசு கொட்டி மொழிப்போரில் அணிவகுத்தோர் அனைவர்க்கும்
அரசொன்று வருமென்று கருதிடாமல் அறப்போர்களிலே
ஆவிதனை அர்ப்பணித்தோர்க்கும்; அகவை எண்பத்தி ஐந்தில்
அன்பு குழைத்து; அய்யன்மீர்! வீர வணக்கம் செலுத்துகின்றேன்.
வழித்தோன்றல்களாய் அவர்க்கு வாய்த்த குடும்பத்தார்க்கும்
கழிபேருவகைப் பொங்கி வழிந்திட நன்றிகளைக் குவிக்கின்றேன்.
அலை அலையாய்ப் பெருகி அணி வகுத்துத் திராவிட இயக்க
அரண் காத்திட ஆர்த்தெழாமல் அன்றைக்கு அயர்ந்திருப்பின்
தீரா விடமன்றோ நம்மினத்தைத் தீர்த்துக் கட்டியிருக்கும்
ஈரோடு சிங்கமன்றோ எழுந்து முழங்கிற்று!

போராட வா தம்பியென்று காஞ்சியின் புறநானூறும் அழைத்தபோது
வேரோடு தமிழினம் வீழாமல் காப்பதற்கு;
வெகுண்டெழுந்து வந்தவரில் ஒருவன் நான்!
பகுத்துணர்ந்து பல்லாண்டுகளாக இனமுழக்கம் செய்கின்ற
பண்பாளர் எனக்கு மூத்த பேராசிரியர்
பழகு தமிழில் ஆணையிட்டு அழைத்த பிறகும்
பகுத்தறிவுப் பாசறையாம் பழைய தாய்க் கழகத்து வீர
மணிக்குரலும் விரிவானமாய் மனம் தோய்த்து
பல்லாயிரம், பல லட்சம் உடன் பிறப்பாளர்
பாசத்தை வெள்ளமாய்ப் பாய விட்டுப்
"பணிந்திடுக எம் அன்புக்கு!'' என ஆணையிட்ட பின்னும்
துணிந்து நான் துண்டிக்க முடியுமோ உடன்பிறப்புத் தொடர்பையெல்லாம்;
அதனாலே பாவேந்தர் பாடல் வரி போல
"தொந்தரவுக்குள்ளே நான் சுகம் காண'' ஒப்பிவிட்டேன்!
உன் வாழ்த்தினையேற்று
என் வணக்கமும் வாழ்த்தும் வட்டியும் முதலுமாய் வழங்குதற்கே!

(தலைவர் கலைஞர் கவிதை)

Monday, May 19, 2008

கலைஞரை சந்தித்த சோ!

கலைஞரின் இருப்பு - பலருக்கு
அடி வயிற்றில் நெருப்பு!

உடல்நலக்குறைவால் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தலைவர் கலைஞர் பூரணநலம் பெற்று இல்லம் திரும்பினார். ஒரு வாரம் முழு ஓய்வு எடுக்கச்சொல்லி மருத்துவர்கள் அறிவித்தும் இன்று காலை ஆளுநர் மாளிகையில் நடக்கவிருந்த விழா ஒன்றுக்காக கலைஞர் கிளம்பிவிட்டார். காலை ஒன்பது நாற்பத்தி ஐந்து மணியளவில் கலைஞரை நந்தனம் சிக்னலில் காணநேர்ந்தது. உடல்நலம் தேறி இல்லம் திரும்பிய கலைஞரை நேற்று துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி அவரது இல்லத்தில் சந்தித்து சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்தார். விரைவில் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கும் இந்தச் சந்திப்புக்கும் எந்த தொடர்பும் இருந்துவிடக்கூடாது என்று நம்புவோமாக.

Saturday, May 17, 2008

தலைவர் கலைஞரின் ஆத்திச்சூடி!

அண்ணா வழி நில்!
ஆற்றுக பொதுப்பணி!
இலக்கியம் புதுக்கிடு!
ஈனரை ஒதுக்கிடு!
உயிர் தமிழாம், உணர்ந்திடு!
ஊழலை நொறுக்கிடு!
எட்டப்பர் இகழ்ந்திடு!
ஏறு போல் வீறு கொள்!
ஐயம் களைந்து அறிவைப் பயிர்செய்!
ஒழுக்கம் போற்றிடு!
ஓம்புக மெலியோரை!
ஒளவைக் குலம் போற்று!
கழகம் வில்லாம், நின் அணியே கணையாம்!
சாதியை விடுத்து சமத்துவம் முழக்கு!
ஞாயிறு வாழ்த்தி நாளும் உழைத்திடு!
தனியுடைமை தகர்ந்திட தடந்தோள் தட்டு!
நாடு வாழ்ந்திட நலிவு தீர்த்திடு!
பகைவர்க்கு வளையேல்!
மாயைக்கு மயங்கேல்!
வாய்மையே போர்வாள்!
யானை போல் பயன்படு!
“ழ” கரமாய்ச் சிறப்புறு!

Wednesday, April 30, 2008

தமிழ்நாட்டில் மினி எமர்ஜென்ஸி! - கலைஞர் ஒப்புதல்!!

கேள்வி :- வரும் சூன் திங்கள் முதல் ரேஷன் கடைகளில் தள்ளுபடி விலையில் சமையல் எண்ணெய் விற்கப்படும் என்று மத்திய அரசின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்திருப்பதாக இன்று ஏடுகளில் செய்தி வந்துள்ளதே?

கலைஞர் :- உயர்ந்துள்ள விலைவாசியைக் குறைக்க வேண்டு மென்று எதிர்க்கட்சிகள் எல்லாம் அகில இந்திய அளவில் போர்க் குரல் கொடுத்துக் கொண்டுள்ளன. மத்திய அரசும் சரி, தமிழக அரசும் சரி விலைவாசியைக் குறைக்க தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வரு கின்றன. அந்த வரிசையில் தான் இன்றையதினம் இந்த அறிவிப்பு வந்துள்ளது. இதே சலுகையை தமிழக அரசு சார்பில் 2006ஆம் ஆண்டு தி.மு. கழகம் மீண்டும் பதவிக்கு வந்த பிறகு, தமிழகத்திலே உள்ள ரேஷன் கடைகளின் மூலமாக சமையல் எண்ணெய் மட்டுமல்ல, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயில், ரவை, மைதா, கோதுமை போன்ற பொருள்களையும், குறிப்பாக கிலோ அரிசி இரண்டு ரூபாய் விலைக்கும் கொடுத்து வருகிறோம். சில நாட்களுக்கு முன்பு கூட தலைமைச் செயலகத்தில் நிதித் துறை, உணவுத் துறை சம்பந்தப்பட்ட மூத்த அதிகாரி களையெல்லாம் அழைத்து வைத்து நீண்ட நேரம் பேசி சில அறிவிப்புகளையும் விலைவாசியைக் குறைப்பதற்காக அரசின் சார்பில் செய்திருக்கிறோம்.

* - * - * - *

கேள்வி :- நீங்கள் கொடுக்கும் தைரியத்தில் இந்து கடவுள்களை இழிவுபடுத்துவது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக "துக்ளக்" இதழ் செய்தி வெளியிட்டிருக்கிறதே?

கலைஞர் :- "துக்ளக்" இதழுக்கு, இன்றைய "தினமணி" இதழ் புகைப்படத்தோடு பொருத்தமான விடை அளித்திருக்கின்றதே?

திருவாரூர் அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோவிலில் நீலோத் பலாம்பாள் அம்மனுக்கு ரூ. 30 லட்சத்தில் புதிதாக செய்யப்பட்ட தேர் 27-4-2008 அன்று வெள்ளோட்டம் விடப்பட்டுள்ளது. மேலும் அந்தச் செய்தியில் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக அம்மனுக்கு என தனியாக தேர் இல்லை என்றும், பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை புதிய தேர் கட்டுமானத் திருப்பணிக்கு ரூ. பத்து லட்சம் ஒதுக்கீடு செய்தது என்றும் செய்தி வெளியிட்டுள்ளது.

இது மாத்திரமல்ல, கடந்த இரண்டாண்டுகளில் மட்டும் தி.மு. கழக அரசின் சார்பில் 2190 திருக்கோயில்களில் திருப்பணி செய்யப்பட்டு, குட முழுக்கு விழாக்கள் நடத்தப்பட்டுள்ளன.
திருக்கோயில்களில் திருப்பணி செய்வதற்காக ஆண்டுதோறும் அரசு வழங்கும் மானியத் தொகை 75 லட்சம் ரூபாயாக இருந்தது, மூன்று கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது.

கிராம கோயில் பூசாரிகள் நலனுக்கென நல வாரியம் அமைக்கப் பட்டு, இதுவரை 15 ஆயிரம் பூசாரிகள் உறுப்பினர்களாக சேர்க்கப் பட்டுள்ளார்கள்.

வரலாற்றுச் சிறப்பு மிக்க 48 திருக்கோயில்களில் திருப்பணி செய்து குடமுழுக்கு நடத்துவதற்காக புராதன சின்னங்கள் புனரமைப்புத் திட்டத் தின் கீழ் 9.87 கோடி ரூபாய் அரசு நிதி ஒதுக்கப்பட்டது.

240 திருக்கோயில்களுக்குச் சொந்தமான தேர்கள் புதுப்பிக்கப் படும் திட்டம் பத்து கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படுகிறது.

அரசின் சார்பில் செய்யப்படுபவைகளில் சிலவற்றை மட்டும் கோடிட்டுக் காட்டியிருக்கிறேன்.

நேற்றைய தினமணி நாளிதழில் வந்துள்ள மற்றுமோர் செய்தி - சிதம்பரம் அருகே 13 லட்ச ரூபாய் செலவில் முஸ்லீம் பிரமுகர் ஒருவர் மாரியம்மன் கோவில் கட்டி, நேற்றைய தினம் அங்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.

இவற்றிலிருந்து துக்ளக் எழுதியிருப்பதைப் போல - இந்து கடவுள்கள் இழிவுபடுத்தச் சொல்லி நான் யாருக்கும் தைரியமளிக்கவில்லை என்பதையும் துக்ளக் ஆசிரியரைப் போல மறைமுகமாக யாரையும் தூண்டி விடவும் இல்லை என்பதையும் புரிந்து கொள்ளலாம்.

* - * - * - *

கேள்வி :- தமிழ்நாட்டில் "மினி எமர்ஜன்சி" ஆட்சி நடைபெறு வதாக ம.தி.மு.க. தலைவர் வைகோ சொல்லியிருக்கிறாரே?

கலைஞர் :- ஆமாம், "பொடா" சட்டத்தைக் கொண்டுவந்து - அவரை வெளியே வரவிடாமல் சிறையிலே அடைத்து வைக்கப் பட்டுள்ளது அல்லவா! காவல் துறையினர் கைது செய்து வைத்திருப் பவரைக் கூட, இவர் இப்போது நேரிலே சென்று பார்க்க அனுமதி அளிக்கப் பட்டுள்ளது அல்லவா! அதனால் "மினி எமர்ஜன்சி" ஆட்சி என்று சொல்லத் தான் செய்வார். இது இருக்கட்டும், சேது சமுத்திரத் திட்டப் பிரச்சினையிலே பிரதமருக்கு நான் கடிதம் எழுதியதை நிரூபித்தால் என்று சவால் விட்டாரே, நான் ஒன்றுக்கு இரண்டு கடிதங்களை எடுத்துக் காட்டினேனே, அதற்கு என்ன பதில் என்று முதலில் சொல்லச் சொல்லுங்கள். பிறகு மெகா எமர்ஜன்சி, மினி எமர்ஜன்சி பற்றியெல்லாம் பேசலாம்!

* - * - * - *

கேள்வி :- திருவாரூர், அருகேயுள்ள உத்தமதானபுரத்தில் உ.வே.சா நினைவில்லம் நேற்று திறந்து வைக்கப்பட்டிருப்பதைப் பற்றி?

கலைஞர் :- இன்று உ.வே.சாமிநாத அய்யர் அவர்களின் நினைவு நாள். அதை யொட்டித் தான் நேற்றே நினைவில்லம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. தனி மனிதராக இருந்தும் கூட, ஒரு இயக்கம் செய்ய வேண்டிய பணியை நிறைவாக ஆற்றியவர் உ.வே.சா. உ.வே.சா. முயற்சி செய்யாமல் இருந்திருப்பாரேயானால் சங்க இலக்கியங்கள் பல நமக்குக் கிடைக்காமலே போயிருக்கக் கூடும். அந்த வகையில் உ.வே.சா. அவர்களின் நினைவை நாம் என்றென்றும் போற்றுவோமாக. இந்த அரசைப் பொறுத்தவரையில் ஒரு பெருமகன் எந்த வகுப்பைச் சேர்ந்தவர் என்றெல்லாம் பார்க்காமல், அவர் செய்த காரியங்களைப் போற்றக் கூடியது என்பதற்கு இது ஒரு தக்க உதாரணமாகும்.

* - * - * - *

கேள்வி :- செங்கோட்டையன் யார்?

கலைஞர் :- சட்டப் பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர் கோவைத் தங்கம் பேசும்போது தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினை குறித்து எடுத்துப் பேசி கோடநாடு எஸ்டேட் உரிமையாளர்கள் எந்த அளவிற்கு தோட்டத் தொழிலாளர்களுக்கு ஊதியம் கொடுக்கிறார்கள் என்ற கேள்வியை எழுப்பினார். அவரது கேள்விக்கு அவையிலோ - அறிக்கையிலோ விளக்கமளிக்க வேண்டிய அ.தி.மு.க. வைச் சேர்ந்த செங்கோட்டையன் என்னைத் தேவையில்லாமல் வம்புக்கு இழுத்திருக்கிறார். அவருக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை.

அவர் யார் என்பதைப் பற்றி 96ஆம் ஆண்டு சென்னை உயர் நீதி மன்ற நீதிபதி சிவப்பா அவர்கள் தெரிவித்த ஒரு கருத்தைக் குறிப்பிட்டாலே தெரிந்து கொள்ளலாம்.
ஊழல் குற்றச்சாட்டுகளின் வரிசையில் அ.தி.மு.க. ஆட்சியிலே இருந்த அமைச்சர்கள் மீது வழக்குகள் குவிந்த நிலையில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செங்கோட்டையன் மீது போடப்பட்டிருந்த வழக்கில் தன்னை கைது செய்து விடுவார்களோ என்று எண்ணி அவர் சென்னை உயர் நீதி மன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கு உயர்நீதி மன்ற நீதிபதி சிவப்பா முன்பாக வந்த போது - அவர் அளித்த தீர்ப்பில் - பொது நலனைக் காக்கும் பொறுப்பில் இருந்த முன்னாள் அமைச்சர் செங்கோட் டையனின் நடவடிக்கைகள் மற்றவர்களுக்கு முன்னோடியாக இருந்திருக்க வேண்டுமே தவிர கடல் கொள்ளையர் போல இருந்திருக்கக் கூடாது. செங்கோட்டையன் பேருந்துகளுக்கு உதிரி பாகங்கள் வாங்கியதில் ஊழல் செய்து பெருமளவு சொத்து சேர்த்திருப்பதாக ஊழல் ஒழிப்புத்துறையினர் கூறியுள்ளனர்.

அவர் வாங்கிய சொத்துக்களுக்காக முத்திரைக் கட்டணம் மட்டும் ரூ. 2.5 கோடிக்குச் செலுத்தியுள்ளார். அவர் மீதான குற்றச்சாட்டுக்கு அடிப்படை ஆதாரங்கள் உள்ளன. கடல் கொள்ளையர் போல இல்லாமல் பொது நலனைக் காக்க மற்றவர்களுக்கு முன்னோடியாக அவர் இருந்திருக்க வேண்டும். உயர் பதவியில் இருப்பவர்கள் செய்யும் ஊழல் கட்டுக்கடங்காமல் போயுள்ளது. இதனால் சமூக முன்னேற்றம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சூழ்நிலையில் ஊழல் செய்பவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் விசாரணையை நீதி மன்றங்கள் தடுக்கக் கூடாது. அ.தி.மு.க. கொள்கை பரப்புச் செயலாளர் பொறுப்பில் உள்ள செங்கோட்டையனைக் கைது செய்தால் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கான தேர்தல் பணி பாதிக்கும் என்று கூறுவதை ஏற்க முடியாது. அவரது முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று கூறினார்.

அதன் பின்னர் அந்த வழக்குகள் எல்லாம் அவர்களது ஆட்சிக் காலத்தில் முறையாக நடைபெறாமல் தீர்ப்புகள் வேறு விதமாக வந்தன என்ற போதிலும், உயர் நீதி மன்ற நீதிபதி சிவப்பா அவர்களின் பாராட்டினை இந்த அளவிற்குப் பெற்றவர் தான் இன்றையதினம் நான் ஏதோ எஸ்டேட் வாங்கியிருப்பதைப் போல அறிக்கை விடுத்துள்ளார். என்னைப் பொறுத்தவரை நான் முதல்வராக வருவதற்கு முன்பு எந்த வீட்டில் வாழ்ந்தேனோ, அதே வீட்டில் தான் இன்றளவும் வசிக்கிறேன். எந்த எஸ்டேட்டையும் நான் வாங்கவில்லை.

* - * - * - *

28.04.2008

Monday, April 28, 2008

வியக்கவைத்த கலைஞர்!

இன்று கலைஞர் தொலைக்காட்சியில் தசாவதாரம் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நிகழ்ச்சியை ஒளிபரப்பினார்கள். விழாவிற்கு சிறப்பு விருந்தனராக ஜாக்கி சான் அவர்கள் வந்திருந்தார்கள். அந்த மேடையிலே இருந்த அனைவரும் வரவேற்ப்புரை, வாழ்த்துரை, ஏற்புரை என்று பேசினார்கள். ஆனால் தமிழன தலைவர் கலைஞர் அவர்கள் பேசிய போது அனைவரும் வாயடைத்து போய்விட்டார்கள். மற்றவர்கள் பேசும் போது சும்மா பேச வேண்டுமே என்பதற்காக பேசினார்கள். ஆனால் தலைவர் அவர்கள் பேசிய போது தான் அவர் இந்த விழாவிற்கு வருவதற்கு முன்பு எவ்வளவு தயார் செய்து கொண்டு வந்திருந்திருக்கிறார் என்று தெரிந்தது.

அவர் ஜாக்கி சானையும் கமலையும் பற்றி ஒப்பிட்டு பேசியது. ஜாக்கி சான் பற்றி அவரை அழைத்து வந்தவர்களுக்கே தெரியாத பல விஷயங்களை பற்றி பேசியது. அப்படியே புல்லரித்து விட்டது எனக்கு. இதற்காக அவர் எவ்வளவு நேரம் செலவு செய்திருக்க வேண்டும். தலைவரிடம் இருந்து இந்த நல்ல பழக்கத்தை நாம் அனைவரும் கற்றுக்கொண்டால் வாழ்க்கையில் எளிதாக வெற்றி பெற்று விடலாம்.

இந்த விழாவில் ஒரு சின்ன குறை ஜாக்கி சானுக்கு ஒரு மொழி பெயற்பாளரை அமர்த்தியிருக்கலாம்.

Friday, April 18, 2008

கனிமொழி கானா ராக்

ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொன்னால் அது உண்மையாகிவிடும் என்பதற்கு மிக சிறந்த உதாரணம், கர்னாடக சங்கீதம் மற்றும் பரதநாட்டியம் தான் சிறந்தது என தமிழ்நாட்டில் நிலவிவரும் ஒரு கற்பிதம். மற்ற கலை வடிவங்களான நாட்டுப்பாடல்கள், கரகம், ஒயிலாட்டம் மற்றும் கானா பாடல்கள் தாழ்ந்தவை என்றும் அதை நடத்துபவர்களும்,ரசிப்பவர்களும் ரசனை குறைவானவர்கள் என்றும் ஒரு நுண்ணிய பிரச்சாரம் ஊடகங்களால் செய்யப்பட்டு வருகிறது.

மேற்கத்திய நாடுகளிலும் இம்மாதிரி பிரிவுகள் உண்டு ஆனால் ஏற்ற தாழ்வு இல்லை. நாம் ரசிக்கும் மேற்கத்திய சங்கீதம் எல்லாமே பல பிரிவுகளை சேர்ந்ததுதான். மேற்கத்திய கிளாசிகல் சங்கீதம் எதையும் நாம் ரசிப்பதில்லை ஏனைய வடிவங்களான ராக்,பாப் போன்றவற்றையே ரசிக்கிறோம். அந்த இசை அமைப்பாளர்களை கொண்டாடுகிறோம். ஆனால் இங்குள்ள மற்ற இசை வடிவங்களை ஏளனம் செய்கிறோம்.

தமிழுக்கும் தமிழ் கலைகளுக்கும் தாழ்வு வரும் போதெல்லாம் அதை தாங்கிப்பிடிக்கும் தூணான கலைஞர் அவர்களின் புதல்வி இவ்விசயத்தில் தந்தையையே மிஞ்சினார். சென்னை சங்கமம் என்னும் நிகழ்ச்சிக்கு தோள் கொடுத்தார். தமிழகத்தின் பாரம்பரிய கலை வடிவங்களுக்கு மரியாதை பெற்றுத்தரும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

இனிவரும் தலைமுறையாவது எல்லா கலைகளையும் சமமாக மதிக்கட்டும்.

Thursday, April 17, 2008

கலைஞர் கமல்ஹாசன் அம்பானி

சாமி கும்பிடவில்லையென்றால் ஒரு முன்னேற்றமும் கிடைக்காது என்று காலம் காலமாக பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் ஆன்மீகத்தை திணிப்பதால்தான் தலைமுறை தலைமுறையாக அது தொடருகிறது. இதை உடைக்க முக்கிய ஆயுதம் நாத்திகர்களாக இருந்து வெற்றி அடைந்தவர்களை முன் நிறுத்துவதே. அப்படிப்பட்டவர்களை உதாரணமாக எடுத்துக்கொள்ளும் பதின்ம வயதினர் பகுத்தறிவு பாதைக்கு பெருமளவில் திரும்பும் வாய்ப்புள்ளது. முன் காலத்தில் கூட அரசன் பின்பற்றிய மதங்களையே மக்கள் அதிக அளவில் பின்பற்றினர்.(உதாரணம் :அசோகர் - புத்த மதம் மற்றும் பாண்டிய மன்னர் சமன மதத்தை பின்பற்றுவதால் அனல்வாதம் புனல்வாதம் செய்து சைவ சமயத்திற்கு அவரை மாற்றியது). எனவே வெற்றி பெற்று நான் நாத்திகன் என்று அறிவிப்பவராலேயே பகுத்தறிவு இயக்கம் வலுப்பெறும்.


இதற்கு நம் கண் முன்னே உதாரணமாய் இருப்பவர்கள் கலைஞர் மற்றும் கமல்ஹாசன். எனவே வரும் தலைமுறைக்கு இவர்களை உதாரணமாய் காட்டி பகுத்தறிவை வளர்ப்போம். இதில் கலைஞர் அடைந்த வெற்றி மத நம்பிக்கைகள் உள்ளவர்களை எதிர்த்து போராடி பெற்ற வெற்றி. கலைஞர் பகுத்தறிவு இயக்கத்துக்கு செய்த மிகப்பெரும் உதவி இதுவே. அம்பானி, பில்கேட்ஸ்,மிட்டல் மற்றும் நடிகர்கள் நாங்கள் நாத்திகர் என்று அறிவித்தால் எப்படி இருக்கும்?

மைதானத்தை தாண்டி விழுந்த மகா சிக்சர்

இன்று இடஒதுக்கீட்டில் ஒரு முக்கியமான நாள். தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு சேர்க்கையில் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும் என அரசு ஆணை பிறப்பித்துள்ளது.பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்த பணிகளில் இது முக்கிய இடம் பெற்றுள்ளது. இந்த ஆட்சியில் கல்வித்துறை இரண்டாக பிரிக்கப்பட்டு செம்மைப்படுத்தப்பட்டது, நுழைவுத்தேர்வு ஒழிப்பு என அடுத்து அடுத்து அடிக்கப்படும் சிக்சர்களில் இது மைதானத்தை தாண்டி விழுந்த மகா சிக்சர்.
மேலும் ஐ ஐ டி களில் இந்த ஆண்டு 9% இடங்களை பிற்படுத்தபட்ட மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்போவதகவும் வரும் ஆண்டுகளில் இதை அதிகரித்து மூண்று ஆண்டுகளுக்குள் 27% ஒதுக்கீடு செய்யப்போவதகவும் ஐ ஐ டி இயக்குனர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கபட்டுள்ளது. இது இட ஒதுக்கீட்டை தொடர்ந்து வலியுறுத்தி வந்த நமக்கு மேலும் ஒரு வெற்றி

Wednesday, April 09, 2008

டாக்டர் ராமதாஸ் ஸ்பின் பவுலர் என்றால் கலைஞர் யார்?

தலைவர் கலைஞர் சில நட்களுக்கு முன் பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் அய்யா அவர்களை ஸ்பின் பவுலர் என்று வர்ணித்தார். தலைவர் பேசும் போது ராமதாஸ் அய்யா வீசும் பந்து எங்கேயோ போவது மாதிரி தெரிந்தாலும் சரியாக விக்கெட்டை வந்து சாய்த்து விடும் என்று சொல்லி இருந்தார். இதனால் டாக்டர் அய்யா மிக மகிழ்ச்சி அடைந்து இருக்கக் கூடும். பின்னே அரசியல் மேதையின் வாயிலிருந்து பாராட்டு பெறுவது என்பது சாதாரண காரியமா.

டாக்டர் அய்யா அவர்கள் ஸ்பின் பவுலர் என்றால் தலைவர் கலைஞர் அவர்கள் அணித் தலைவர். யாருக்கு எத்தனை ஓவர்கள் கொடுக்க வேண்டும், யாரை எங்கே நிறுத்த வேண்டும், யாருக்கு எதிராக‌ யாரை பந்து வீச செய்ய வேண்டும் என்று முடிவு செய்யும் பொறுப்பு எல்லாமே அவரிடம் தான் இருக்கிறது. அணியின் வீரர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொறு திறமை இருக்கும் இவை அனைத்தையும் சரியாக பயன்படுத்த தெரிந்தவர் தான் நம் தலைவர். அதை தலைவர் அவர்கள் மிகச் சிறப்பாக் செய்து வருகிறார் என்பதற்கு இந்த ஆட்சியின் சாதனைகளே சான்று.

டெஸ்ட் போட்டியில் (மத்திய தேர்தல்) எப்படி விளையாட வேண்டும், ஒரு நாள் போட்டியில் (மாநில தேர்தல்) எப்படி விளையாட வேண்டும், 20-20 போட்டியில் (இடைத் தேர்தல்) எப்படி விளையாட வேண்டும் என்பது எல்லாம் அணித் தலைவர் கலைஞர் அவர்களுக்கே அத்துபடி. அவர் டெண்டுல்கரும் அல்ல டோணியும் அல்ல அரசியலில் அவர் ஒரு ஞானி (ஞாநி அல்ல‌)

Tuesday, April 08, 2008

ஒகேனக்கல் பிரச்சினையும், பார்ப்பனர்கள் கும்மாளமும்!

ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது போல தமிழ்நாட்டில் ஏதாவது பிரச்சினை என்றால் இப்போதெல்லாம் கும்மாளமிடுவது பார்ப்பனர்கள். காவிரி பிரச்சினையாக இருந்தாலும் சரி, பெரியாறு, ஒகேனக்கல் பிரச்சினையாக இருந்தாலும் சரி. பார்ப்பனர்களுக்கு அந்த பிரச்சினை தீரவேண்டுமென்ற அக்கறையெல்லாம் எதுவுமில்லை. அப்பிரச்சினைகளை காரணம் காட்டி கலைஞரை திட்டி தீர்க்கலாமே என்ற மகிழ்ச்சி தான் அதிகமாக தென்படுகிறது. தற்போது இணையத்தில் பார்ப்பனர்கள் எழுதிவரும் கட்டு உரைகளையே இதற்கு நல்ல உதாரணமாக காட்டலாம்.

பிரச்சினை பாஜக ரூபத்தில் தொடங்கியபோது ஒகேனக்கல் குறித்த அக்கறை இல்லாத பார்ப்பனர்கள் அங்கே வெறியாட்டம் நடந்து, தமிழகத்திலும் மானமுள்ள தமிழர்களால் போராட்டம் நடத்தப்பட்டு கலைஞரின் விவேகத்தால் இப்பொழுது கொந்தளிப்பு அடங்கிய நிலையில், கலைஞரை திட்ட காரணம் கிடைக்காதா என்று நாக்கை தொங்கப்போட்டு அலைந்த பார்ப்பனர்களுக்கு திடீரென ஒகேனக்கல் திட்டம் மீது அக்கறை வந்திருக்கிறதாம். இதுபோல எப்போதாவது பார்ப்பனர்களுக்கு தமிழ் மீதும், தமிழன் மீதும் அக்கறை பிறக்கும்.

தில்லையிலே தமிழுக்கு இடம் கேட்டபோதும் வராத அக்கறை, தமிழை கட்டாயப்பாடமாக சேர்க்கும்போது வராத அக்கறை கலைஞரையும், திராவிட இயக்கங்களையும் திட்ட வாய்ப்பு கிடைத்தால் மட்டும் பார்ப்பனர்களுக்கு வந்துவிடும். ஒகேனக்கல் பிரச்சினை பெரிய பிரச்சினையாக மாறும், இருதரப்பிலும் ரத்தக்களறி ஏற்படும், கலைஞரின் ஆட்சி கலைக்கப்படும், மத்தியில் ஐ.மு. ஆட்சி கலைந்து பாஜக ஆட்சி ஏற்படும் என்றெல்லாம் எதிர்பார்த்த ஒட்டுண்ணி பார்ப்பனர்களுக்கு கலைஞரின் விவேகமான அணுகுமுறை ஏமாற்றத்தை தான் அளித்திருக்கும். அந்த ஏமாற்றம் தந்த ஆற்றாமை தான் அவர்களை இப்படி எழுதவும், பேசவும் வைக்கிறது.

Saturday, April 05, 2008

மூன்றாம் பாலுக்கு அங்கிகாரம் ‍ கலைஞர் அரசின் சாதனை

தொலைக்காட்சியில் திருநங்கையான சக பதிவர் ஒருவர் பங்கு பெற்ற நிகழ்ச்சியை பார்த்து இருப்பீர்கள். அவர் தன் அனுபவத்தை விவரிக்கும் போது உங்களுக்கு கண்டிப்பாக கண்கள் குளமாகி இருக்கும். இப்படி சமூகத்தில் உரிய அங்கிகாரம் கிடைக்காமல் வாழ்ந்து வந்த அவர்களுக்கு முறையான அங்கிகாரத்தை தலைவர் கலைஞர் அவர்களின் அரசு அளித்துள்ளது

இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழ்நாட்டின் தால் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. மூன்றாம் பால் இனத்தவருக்கு என் குடும்ப அட்டையில் மேலும் புதிதாக ஒரு பால் சேர்க்கப்பட்டு அதை சில திருநங்கைகளும் பெற்று இருக்கிறார்கள். இந்த புரட்சியின் மூலம் மூன்றாம் பாலினத்தை சேர்ந்த நாற்பது ஆயிரம் பேர் பயனடைவர். குடும்ப அட்டை போல் பாஸ்போர்ட் போன்ற ஆவணங்களில் இதே போல் கொண்டு வர வேண்டுமானால் அதற்கு மத்திய அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் கூறினார். வரும் காலத்தில் அப்படி மாற்றம் நிகழுமானால் அதன் முழு பெருமையும் தலைவர் கலைஞர் அவர்களையே சேரும்

பாலம் கட்டுவது பற்றி பேசினால் தலைவர் கலைஞர் அவர்கள் விளம்பரம் தேடுகிறார் என்று அக்கறைப்படும் பத்திரிக்கைகளே இதே போல் சத்தம் இல்லாமல் தலைவர் அவர்கள் செய்து வரும் சாதனை பற்றி நீங்கள் என்றாவது மக்களிடம் கொண்டு சென்றது உண்டா. தலைவர் அவர்களிடம் குறை காண வேண்டும் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் எழுதுவீர்களா

Thursday, April 03, 2008

ராமர் போய் ஒகேனக்கல்

பாரதீய ஜனதா என்று ஒரு கேவலமான கட்சி. இவர்கள் ஆட்சிக்கு வர வேண்டுமானால் ஒன்று எதையாவது இடிக்க வேண்டும், அல்லது கலவரம் வந்து சில‌ ஆயிரம் பேர் மாள வேண்டும், உயிர் துறப்பவர்கள் இந்துவா, முஸ்லிமா என்பது பற்றி இவர்களுக்கு கவலை இல்லை. உருப்படியான ஒரு பிரச்சினையை மக்களிடம் எடுத்து செல்ல துப்பில்லாத இந்த இரத்தம் குடிக்கும் கட்சி இப்போது கர்நாடகாவில் கையில் எடுத்து இருக்கும் ஆயுதம் மொழி வெறி

கர்நாட்காவில் கூட்டணி ஆட்சி அமைக்கும் அளவுக்கு வளர்ச்சி கண்டுவிட்ட பாரதீய ஜனதாவுக்கு சுழல் முறை ஆட்சி என்ற திட்டம் தோல்வி அடைந்ததும் அதன் அதிகார வெறி முற்றிவிட்டது போலும். மே மாதம் தேர்தல் என்ற நிலையில் இருக்கும் கர்டநாடகாவில் தன் இரத்த தாகத்தை தீர்த்துக் கொள்ள ஓகேனக்கல் பிரச்சினை வரப்பிரசாதமாக் கிடைத்து இருக்கிறது. மனித பிணங்களை ஓட்டுகளாக மாற்றுவதில் தான் இவர்கள் மன்னர்கள் ஆயிற்றே

தமிழ்நாட்டில் வந்து ராமர் பாலம் என்ற பெயரில் ஊளையிட்ட இந்த நரிக‌ளின் வால்க‌ள் ஒட்ட நறுக்கப்பட்டன. இப்போது கர்நாட‌காவில் ராமர் மற்றும் இந்துத்வா வெறி செல்லாது என்று அறிந்து கொண்டு மொழி வெறியை வளர்ப்பதில் முன் நிற்கின்றனர். மொத்தத்தில் இவர்களுக்கு என்றுமே மக்களை பிளவுபடுத்தி அதில் இன்பம் காண்பது இந்த பண்டாரங்களுக்கு தான் வழக்கமாகிவிட்டது