Showing posts with label இந்தியா டுடே. Show all posts
Showing posts with label இந்தியா டுடே. Show all posts

Thursday, July 03, 2008

கலைஞரின் காவியப் பயணம் - இந்தியா டுடே சிறப்பிதழ்

மதியம் இரண்டு மணிக்கு வாங்கி படிக்க ஆரம்பித்தது. இப்போது இந்தப் பதிவை எழுதும் போது இரவு மணி சரியாக 10:02. மூன்று முறை திரும்பத் திரும்பப் படித்தாகி விட்டது. கலைஞர் போன்ற ஆளுமையின் என்பத்தைந்து வருட வரலாற்றை 120 பக்கங்களிலெல்லாம் அடக்கி விட முடியவே முடியாது என்றாலும் இந்தியா டுடேயின் இந்த வார சிறப்பிதழான "காவியப் பயணம்", கலைஞர் குறித்தும் அவர் எழுத்துக்களையும் தேடிச் சென்றுபடித்தேயாக வேண்டும் என்கிற தணியாத ஏக்கத்தை ஏற்படுத்துவதில் ஓரளவு வெற்றி பெற்றிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

இருபத்தாறு கட்டுரைகளும் கலைஞரின் சிறப்புப் பேட்டியும் ஒரு புகைப்படக் கவிதையுமாக இதழ் முழுக்க கலைஞரைக் கொண்டாடி இருக்கிறார்கள். ஆங்காங்கே அள்ளித் தெளிக்கப்பட்டிருக்கும் "உங்களுக்குத் தெரியுமா?", கலைஞரின் எழுத்துக்களில் இருந்து மேற்கோள்கள் என்று சர்க்கரைப் பொங்கலின் இடையே தட்டுப்படும் முந்திரிப் பருப்பைப் போல இந்த இதழ் வாசிப்பு ஓர் சுகானுபாவமாக இருக்கிறது. என்பத்தைந்து வயதில் விடாப்பிடியாக அவர் யோகப் பயிற்சிகள் செய்யும் படங்களைப் பார்த்து விட்டு தலையைக் குனிந்தால் எனக்கு முன்னே சரிந்த என் தொப்பை வெட்கத்தைத் தான் வரவழைக்கிறது.

கலைஞர் எல்லோருக்கும் ஏதோவொரு விதத்தில் இன்ஸ்பிரேஷனாய் இருக்கிறார். காலை நாலேகாலுக்கு துவங்கி இரவு பதினோரு மணிக்குத்தூங்கச் செல்லும் வரை அவரின் அந்த ஓயாத உழைப்பைப் பற்றி படிக்கும் சோம்பேரி எவனும் தனது சோம்பேரித்தனத்தை நினைத்து வெட்கப்பட்டேயாக வேண்டும். ஓயாத அரசுப்பணி, அரசியல் பணி, பத்திரிகைப் பணி -இத்தனைக்கும் இடையே மறக்காமல் பேரனின் முத்தத்தைக் கேட்டுப் பெறும் பாசக்காரப் பெரிசு! ஒவ்வொரு நாளையும் ஒரு புத்தக வாசிப்போடு முடிக்கும் தேடுதல் வேட்கை கொண்ட இளைஞர் என்று எண்ணிலடங்காத பரிமாணங்கள் நம் கண் முன்னே விரிகிறது.

ஏதாவது ஒரு கட்டுரையை ஹைலைட்டாகக் காட்ட வேண்டும் என்பதற்காகவே முன்றாம் முறையாக வாசித்துப் பார்த்து சோர்ந்தே விட்டேன். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் கலைஞரின் வெவ்வேறு பரிமாணத்தைக் கண்முன்னே விரிக்கிறது ( விதிவிலக்கு பிரபு சாவ்லாவின் அந்த மொக்கைக் கட்டுரை). அரசியல்வாதியாக, முதல்வராக. கவிஞராக, வசனகர்த்தாவாக, விளையாட்டு ரசிகராக, ராஜதந்திரியாக, சிறந்த பேச்சாளராக, பத்திரிகையாளராக, பெரியாரின் சீடராக, குயுக்தியான வியூகவகுப்பாளராக... இப்படி ஏதோவொரு வகையில் ஆறுகோடித் தமிழர்களையும் ஈர்க்கும் ஒரே பர்சனாலிடி கலைஞரைத் தவிர வேறு எவரும் இருக்க முடியாது.

அட... இதெல்லாவற்றையும் வெறுத்தாலும் கூட அந்தக் குறும்புக்கார கிழவரை ரசிக்காதவர் எவர் இருக்க முடியும்? கலைஞரை ஒருத்தன் கட்டோ டு வெறுக்கிறான் என்றால் ஒன்று அவன் பாப்பானாய் இருக்க வேண்டும் இல்லை பைத்தியமாய் இருக்க வேண்டும்.

கவிஞர் கலாப்ரியாவின் கட்டுரையில் நேரு காலத்தில் சோசலிசம் பேசிய காங்கிரஸின் பிற்காலத்திய "பரிணாம" வளர்ச்சியைக் கிண்டலடித்து 92ல் அவர் எழுதியகவிதை -

"திருப்பதியில் காங்கிரசு மாநாடு
ஆவடியில் மொட்டாக வெடித்த சோஷலிசம்
ஆண்டவன் சந்நிதியில் மொட்டையாக நின்றது"

இந்தக் குறும்பு தான் கலைஞர்! கலைஞரின் பேணாவிலிருந்து கவிதையாய்ப் புறப்படும் எள்ளலும் கிண்டலும் எதிரியின் முகத்தில் கூட புன்னகையை வரவழைத்து விடக்கூடியது.

உடன்பிறப்புக்கள் மட்டுமல்ல தமிழ் வாசிக்கத்தெரிந்த ஒவ்வொருவரும் வாங்கிப் படித்துப் பாதுகாக்க வேண்டிய இதழ்.