Wednesday, April 15, 2009

ராமதாஸின் கனவை நிறைவேற்றிய கலைஞர்

இந்த பதிவு எழுது முன் சக உடன்பிறப்புகளுடன் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்திக் கொண்ட பிறகே எழுதினேன் ராமதாஸ் இன்னமும் திரும்ப நம்ம கூட்டணிக்கே வரவில்லையே என்று. அவர் எப்போ எந்த கூட்டணியில் இருப்பார் என்றே சொல்ல முடியாது. மக்கள் தொலைக்காட்சியில் வானிலை நிலவரம் மாதிரி ராமதாஸின் கூட்டணி நிலவரத்தையும் தினமும் சொன்னால் மிகவும் வசதியாக இருக்கும். ராமதாசுக்கு இவ்வளவு பில்டப் போதும் என்று நினைக்கிறேன்

நம்ம ராமதாசுக்கு கூட்டணி மாறுவதை தவிர மேலும் சில பொழுதுபோக்குகள் உண்டு. அதாவது அவ்வப்போது ஏதாவது சினிமா நடிகரை வம்பிழுப்பது. பாபா படம் வந்த போது ரஜினியுடன் வம்பிழுத்தார், பாபா படப்பெட்டியை தூக்கிக் கொண்டு ஓடினார்கள். அடுத்து விஜயகாந்தையும் சிலகாலம் உரசிப் பார்த்தார் விருத்தாசலத்தில் விழுந்த செம அடிக்கு அப்புறம் கொஞ்சமாக அடக்கி வாசிக்கிறார்

நடிகர்களுடன் மோதிக் கொள்வதை தவிர மீதி நேரங்களில் தமிழ், தமிழ் கலாச்சாரம் என்றும் சில சமயங்களில் காமெடி பண்ணுவார். சில வருடங்களுக்கு முன் தமிழ் படங்களுக்கு தமிழில் தான் பெயர் வைக்க வேண்டும் என்று சொல்லி சில திரைப்படங்கள் வெளிவரும் நேரத்தில் பிரச்சினை செய்தார் அதில் முக்கியமானது மும்பை எக்ஸ்பிரஸ். மும்பை எக்ஸ்பிரஸ் படத்தின் பெயரை மாற்ற சொல்லி பல திரை அரங்குகளில் பிரச்சினை செய்ததோடு அல்லாமல் ஒரு திரை அரங்கில் திரையையும் கிழித்தார்கள். ஆனால் கமல் அவர்களை சட்டை செய்யவே இல்லை. கமல் மட்டுமல்ல திரையுலகை சேர்ந்த யாருமே இவரை கண்டுகொள்ளவே இல்லை

மரம் வெட்ட முடிந்த ராமதாஸால் இந்த விஷயத்தில் ஒரு புல்லை கூட புடுங்க முடியவில்லை. ஆனால் இப்போது பார்த்தோமானால் எல்லா படங்களுமே தமிழ் பெயர் தாங்கி வருகின்றன. இதற்கு காரணம் யார். ராமாதாஸின் மரம் வெட்டும் கோடாரியால் சாதிக்க முடியாததை கலைஞர் தன் கையில் உள்ள பேனாவால் ஒரு கையெழுத்து போட்டு சாதித்தார்

வாரணம் ஆயிரம் என்று பெயரை தமிழில் வைத்துவிட்டு உள்ளே முழுக்க ஆங்கில வசனங்கள் வைத்ததை பற்றி இங்கே சொல்ல வரவில்லை. ஒரு போரட்டத்துக்கு இரு தலைவர்களின் அனுகுமுறையை பற்றி தான் சொல்ல வருகிறோம். படப் பெட்டியை தூக்கிக் கொண்டு போவதாலோ திரையை கிழிப்பதாலோ முடியாத காரியத்தை விவேகத்தோடு செய்து முடித்தவர் தான் கலைஞர்

ரத்த ஆறு ஓடும் என்று பேசுபவர்களால் ரத்த ஆறு ஓட வைக்கவே முடியும் அவர்களால் ஒரு தீர்வையும் முன் வைக்க முடியாது. ஏற்கனவே ஒரு தேசத்தில் ரத்த ஆறு ஓடுவது போதாதா இவர்களுக்கு இங்கேயும் ரத்த ஆறு ஓட வேண்டுமா

0 comments: