Thursday, July 02, 2009

அஞ்சாநெஞ்சன் ஆடும் அதிரடி ஆட்டம்



தென் மாவட்ட மக்களை கவர முதல்வன் பட பாணியில் களம் இறங்கிய மு.க.அழகிரி, அதிரடி நடவடிக்கை மூலம் 100க்கு 100 என்ற கணக்கில் தேர்தலில் வெற்றி பெற வியூகம் வகுத்துள்ளார்.

தமிழக முதல்வரின் மகனும், மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி கடந்த காலங்களில் மதுரையில் தனது செல்வாக்கை பயன்படுத்தி கட்சியினருக்கு பல்வேறு பொறுப்புகளை பெற்றுத் தந்தார். தற்போது, திமுக தலைவர் கருணாநிதியால் தென் மண்டல அமைப்பு செயலாளர் என்ற பொறுப்பு அளிக்கப்பட்டது.

அதன் மூலம் தென் மாவட்டத்தைச் சேர்ந்த திமுகவினருக்கு பொறுப்புகளையும், பதவிகளையும் இவர் கை காட்டும் நபருக்கே கட்சி மேலிடம் வழங்கி வந்தது. கடந்த மக்களவைத் தேர்தலுக்கான தொகுதி வேட்பாளர் நியமனத்திலும், தொகுதியை திமுகவினருக்குப் பெற்றுத் தருவதில் வாக்குறுதியும் அளித்து அதை நடைமுறையிலும் கொண்டுவந்து வெற்றி பெற்றார்.

இந்நிலையில் மு.க.அழகிரிக்கு மத்திய அமைச்சர் பதவியும் அளிக்கப்பட்டது. அமைச்சர் பதவியேற்ற பின்னர், முதல்வன் பட பாணியில் மு.க.அழகிரி மக்கள் குறை தீர்க்க அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். திமுகவினருக்கு மட்டுமே ஆதரவாக செயல்பட்டுவந்த அவர் கடந்த சில நாட்களாக திட்டப் பணிகளில் மக்களுக்கு பயன்படும் வகையில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

இவருடைய அதிரடி நடவடிக்கையை கேள்விபட்டு தென் மாவட்டத்தை சேர்ந்த ஆதரவற்ற மக்கள் மனுக்களுடன் அவரது வீட்டை முற்றுகையிடத் துவங்கியுள்ளனர். சமீபத்தில் கூட தனது வீட்டில் காத்திருந்த முதியவரை அழைத்து, அவரது மனுவை பெற்றுக் கொண்ட அழகிரி, முதியோர் பென்ஷனுக்காக பல ஆண்டுகளாக அலைவதைக் கேட்டறிந்து, விருதுநகர் மாவட்ட ஆட்சியரைத் தொடர்பு கொண்டு, 64 வயதான அந்த முதியவர் அவர் ஊருக்குச் செல்லும் முன்பே அதிகாரிகள் அவரது வருகைக்காக காத்திருந்தனர். 24 மணி நேரத்தில் அவரது பிரச்சனையையும் தீர்த்து வைத்தனர்.
இதேபோன்று, தூத்துக்குடியில் ஒரு திருமண விழாவிற்கு வந்த அழகிரியை சந்தித்து, தூத்துக்குடி செல்வ விநாயகபுரத்தை சேர்ந்த சாந்தி என்ற பெண் தனது 4 மகன்களயும் கடந்த ஜனவரி மாதம் சென்னை கேளம்பாக்கம் அருகே உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றபோது அருகே உள்ள கல்குவாரி குட்டையில் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவத்தை வருத்தத்துடன் மனுவாக வழங்கினார். மனுவை வாங்கி படித்த மு.க.அழகிரி ஆட்சியர் கோ.பிரகாஷை வரவழைத்து சம்பவ இடத்திலேயே பாதிக்கபட்ட பெண்ணுக்கு உதவி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார். இப்படி அழகிரியின் அதிரடி நடவடிக்கை தொடர்ந்துகொண்டே இருப்பதாக மதுரை அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில், தூத்துக்குடி திருமணவிழாவில் பேசுகையில் கூட திமுகவினருக்கு ஒரு கட்டளையிட்டார். ஒன்றியம், நகரம், மாவட்ட அளவிலான நமது கட்சியைச் சேர்ந்தவர்கள் அடிதட்டு ஏழை மக்களுக்கு கிடைக்க வேண்டிய அரசு நலப் பணிகளை ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர்களிடமும் மனுவாக வழங்கி அதைப் பெற்றுத் தரவேண்டும் என திமுகவினருக்கு கட்டளையிட்டார்.

அழகிரியின் இந்த அதிரடி நடவடிக்கை வருகிற சட்டமன்ற தேர்தலில் 100க்கு 100 என்ற வெற்றியை பறிப்பதற்காக இருப்பதாக தெரிகிறது. எப்படியோ பலநலதிட்டங்கள் பொதுமக்களை சென்றடைந்தால் நல்லதுதானே?


முதல்வன் பாணியில் மு.க.அழகிரி


2 comments:

said...

KALAIZARUKKU PIRAHU THI MU KA VAI KATTI KAAKKA POVATHU ANJAA NENJAN THAAN.

said...

தினமலர் கூட செய்தி போட்டிருந்தது. நாங்க வெடி வெடித்து கொண்டாடாத குறை தான்!