Wednesday, June 25, 2008

குருவி பதிவு பற்றி அறிவு"சீவி" காமெடி

ஒரு முறை பேருந்து பயணத்தின் போது நிகழ்ந்த சம்பவம். பேருந்து ஓட்டுனருக்கும் சட்டை பையில் பேனா சொருகி இருந்த பயணி ஒருவருக்கும் வாக்குவாதம். கிட்டத்தட்ட அரை மணி நேரம் இருவரும் வாக்குவாதம் செய்துவிட்டு சோர்வடைந்த நேரம் பேனா ஆசாமி ஓட்டுனரை பார்த்து, சிலருக்கு ஸ்டியரிங்கை பிடித்துவிட்டா என்னவோ ஏரோபிளேன் ஓட்டுவதாக நினைப்பு என்றார். உடனே ஓட்டுனர் பதிலுக்கு சிலருக்கு சட்டை பையில் பேனா வைத்துவிட்டால் மேதாவின்னு நினைப்பு என்று பதிலடி கொடுத்தார். சட்டை பையில் பேனா வைத்து இருப்பவர்கள் படித்தவர்கள் என்பது பொதுவான கணிப்பு. அல்லது படித்தவர் போல் காட்டிக் கொள்ள சட்டை பையில் பேனா வைத்து இருப்பார்கள் சிலர். இந்த மனோபாவம் சில வலைப்பதிவர்களுக்கும் இருக்கிறது போலும்

நமது குருவி (குருவி படத்தின் மீது ஏன் இந்த கொலைவெறி - பிரமிட் சாய்மீராவுக்கு வேண்டுகோள்)
பதிவு பற்றிய சில அறிவு"சீவி" பதிவர்களின் கருத்தை பார்க்கும் போது அப்படி தான் எண்ண தோன்றுகிறது. ஒரு வலைப்பூ ஆரம்பித்து பதிவுகள் எழுதிவிட்டா என்னவோ தாங்கள் மேதாவி என்று நினைத்துக் கொள்கிறார்கள். இன்னும் கொடுமை என்னவென்றால் மற்றவர்களும் அவர்களை போல் மட்டும் தான் சிந்திக்க வேண்டுமாம். உடன்பிறப்புகளை விசிலடிச்சான் குஞ்சுகள், பிரியாணி பொட்டல குஞ்சுகள் என்று விமர்சிக்கும் இவர்கள் தங்கள் வலைப்பூவுக்கு வரும் பின்னூட்டங்களை பிரியாணி பொட்டலமாக கருதும் இவர்கள் தங்களுக்கு ஜிங்ஜாங் அடிக்கும் சக பதிவர்களின் வலைப்பூவில் சென்று விசிலடித்து பின்னூட்டம் இடும் இவர்கள் எந்த வகையில் வேறுபட்டவர்கள் என்று தெரியவில்லை. பொதுவாக உடன்பிறப்புகள் தங்கள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் பற்றி கவலைப்படுவதில்லை. ஆனால் இவர்கள் அறிவு"சீவி" தனம் என்று பண்ணும் காமெடி தாங்க முடியவில்லை

அய்யா மேதாவிகளே உங்களுக்கு தான் அறிவு"சீவி" என்று இமேஜ் எல்லாம் இருக்கு. அதனால் உங்களால் ஒரு வட்டத்தை விட்டு வெளியே வந்து எழுத முடியாது ஆனால் எங்களுக்கு அப்படி இல்லை. உங்களுக்கு பிடிக்கவில்லை என்பதற்காக எங்களுக்கு தோன்றுவதை எழுதாமல் இருக்க முடியாது. இறுதியாக நம்ம சாத்தான்குளத்து அண்ணாச்சி சொன்னதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன். "ஊருல நாலு பேரு உடுக்கு உடுக்குன்னு பேசுனா மீதி நாலு பேரு *டுக்கு *டுக்குன்னு புலம்பத்தான் செய்வான". இதில் யார் எந்த நால்வர் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்

Friday, June 20, 2008

குருவி படத்தின் மீது ஏன் இந்த கொலைவெறி - பிரமிட் சாய்மீராவுக்கு வேண்டுகோள்

சமீபத்தில் வெளியான குருவி படம் பற்றி ஒரு மோசமான மனோபாவம் குறிப்பிட்ட சில ரசிகர்களிடமும், சில வலைப்பதிவர்களிடம் நிலவுகிறது. குருவி படம் என்னவோ இதுவரை தமிழில் வந்த திரைப்படங்களிலேயே மட்டமான படம் என்பது போல் ஒரு தோற்றத்தை நிறுவ ஒரு கூட்டம் இரவு பகலாக கண் விழித்து ரூம் போட்டு யோசித்துக் கொண்டு இருக்கிறது. இன்னும் துக்ளக் கார்ட்டூன் வராதது தான் பாக்கி

குருவி படம் கில்லி அளவுக்கு வெற்றி பெறவில்லை என்பது உண்மைதான். ஆனால் அதற்கு கிடைத்த வரவேற்பை ஏற்றுக் கொள்ள சிலருக்கு மனம் இடம் கொடுக்க. அதனால் அவர்கள் திட்டமிட்டு குருவி படத்துக்கு எதிரான பிரச்சாரத்தை முடுக்கிவிட்டுள்ளனர். குருவி படத்துக்கு முன் வெளிவந்த இளைய தளபதியின் முந்தைய படத்துக்கும் மறுபட்ட விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் அப்போது எல்லாம் தென்படாத கொலைவெறி குருவி படத்துக்கு மட்டும் இவர்களுக்கு வந்து இருக்கிறது என்பதே இது ஒரு சதிவலை என்பதற்கான ஆதாரம். குருவி படம் வெளிவந்த முதல் வாரத்திலேயே சிலர் படத்தை பார்த்துவிட்டு விமர்சனம் செய்து இருந்தார்கள். இந்த விமர்சனங்கள் வரவேற்கப்பட வேண்டியவை. ஏனெனில் இவர்கள் எந்த பேதமும் இல்லாத சினிமா ரசிகர்கள். ஆனால் இப்போது இணையம் மற்றும் மின்னஞ்சல் பிரச்சாரம் நிச்சயம் ஒரு சதி வலை.

இதற்கு எல்லாம் காரணம் என்ன என்று விளக்க தேவை இல்லை. தலைவர் கலைஞர் அவர்களின் குடும்பத்தில் இருந்து மேகும் ஒருவர் கலைத் துறையில் வெற்றி பெற்றுவிடக்கூடாது என்று இவர்கள் மனப்பால் குடிக்கிறார்கள். இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க பிரமிட் சாய்மீரா நினைத்தால் முடியும். தசாவதாரம் படத்தின் வசூல் 100 கோடி என்று தங்கள் வலைப்பூவில் செய்தி வெளியிட்ட பிரமிட் சாய்மீரா குருவி படத்தின் வசூல் பற்றியும் செய்தி வெளியிட்டால் இந்த கொலைவெறி கூட்டத்தின் பிரச்சாரத்துக்கு சாவு மணி அடிக்கப்படும்

Thursday, June 19, 2008

தினமலரில் “கலைஞர்”

தினமலர் பத்திரிகை எப்போதுமே திராவிட தலைவர்களை இழிவுபடுத்தும் விதமாக ஈ.வெ.ராமசாமி, அண்ணாதுரை என்றுதான் செய்திகளில் பெயர்களை வெளியிடும். பெரியார் என்றோ, அறிஞர் என்றோ சொன்னால் தினமலருக்கு தீட்டு விழுந்துவிடுமாம். ஆனால் இராஜகோபாலாச்சாரியை இராஜாஜி என்றும், சங்கராச்சாரியாரை பெரியவர் என்றும் எழுதும். தினமலரின் ஐம்பதாண்டு வரலாற்றில் கருணாநிதி என்ற சொல் இல்லாமல் தினமலர் வந்ததாக வரலாறே இல்லை. கலைஞர் என்ற சொல்லை தினமலரில் தடையே செய்திருப்பார்கள் போலிருக்கிறது.

இன்று தினமலர் இணையத்தை மேய்ந்தபோது ஒரு அதிசயம், அவர்களுக்கே தெரியாமல் “முதல்வர் கலைஞர்” என்ற சொல்லை பயன்படுத்தியிருக்கிறார்கள். அது தொடர்புடைய ஸ்க்ரீன் ஷாட் கீழே.



Wednesday, June 18, 2008

கூட்டிக்கொடுக்கும் கலைஞர்

"அரசு ஊழியர்களுக்கு ஊதியத்தைக் கூட்டிக்கொடுத்த கலைஞர்.
ஏழைப்பெண்களுக்கு திருமண உதவித்தொகையைக் கூட்டிக்கொடுத்த கலைஞர்.
காவலர்களின் அரை டவுசரை முழு டவுசராக கூட்டிக்கொடுத்த கலைஞர்.
சத்துணவில் முட்டையைக் கூட்டிக்கொடுத்த கலைஞர்.
வேலையில்லா படித்த இளைஞர்களுக்கு உதவித்தொகையைக் கூட்டிக்கொடுத்த கலைஞர்.
இந்திய அரசில் அமைச்சர் எண்ணிக்கையை கூட்டிக்கொடுத்த கலைஞர்."

இப்படித்தான் கூட்டிக்கொடுக்கும், அள்ளிக்கொடுக்கும் கலைஞரை எங்களுக்குத் தெரியும்.கூட்டிக்கொடுத்த கருணாநிதி, மாமா வேலை பார்க்கும் கருணாநிதி என்று வாய்க்கு வந்த படி பேசும் மக இக தோழய்ங்களா, உங்கள் இயக்கத்தில் இருக்கும் மூன்று கோடி உறுப்பினர்களும் சேர்ந்து ஜெயலலிதாவின் சுண்டு விரலையாவது அசைக்க முடியுமா என்று எண்ணிப்பார்க்க வேண்டுகிறேன்.நீங்கள் கனவு மட்டுமே காணும் பல விசயங்களை நனவாக்கிக்காட்டுபவர் கலைஞர் மட்டுமே என்பது ஏன் உங்கள் மரமண்டைக்குப் புரிய மாட்டேன் என்கிறது?.ஓட்டுப்பொறுக்கி அரசியல் என்று எல்லோரையும் சகட்டுமேனிக்கு திட்டும் மக இக தோழய்ங்களா, இந்தியாவை ஆயுதப்புரட்சியின் மூலம் கைப்பற்ற முடியும் என்று நிஜமாகவே எண்ணுகி்றீர்களா?.மலையில் முட்டினால் மண்டை தான் உடையும். இந்திய அரசை ஆயுதப்புரட்சின் மூலம் அகற்றி விட்டு அதிகாரத்தை கைப்பற்றினால் மட்டு்மே மக்களுக்கு உங்களால் சேவை செய்ய முடியுமா?

உலகின் தலைசிறந்த ஜனநாயக நாடுகளே பார்த்து வியக்கும் வண்ணம் தானே இந்தியாவும் இருக்கிறது.இதை விட அமைதியான , பாதுகாப்பான சூழல் வேறெங்கும் இல்லை. ஒடுக்கப்பட்ட, ஏழைமக்களின் முன்னேற்றத்திற்கு இப்போது இருக்கும் சூழலே மிக நன்றாக உள்ளது.(இலங்கைத்தமிழர்களின் நிலையை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்). இருக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்வதை விட்டுவிட்டு பகல்கனவு காண்பதால் என்ன நன்மை?

முழுமையான மனிதாபிமானமே கம்யூனிசம் என்று மூன்றே வார்த்தைகளில் விளக்கம் சொன்னார் லெனின். கலைஞருக்கு மேலாகவா நீங்கள் ஒரு மனிதாபிமானியைக் கண்டு விடப்போகிறீர்கள். முற்போக்கு சிந்தனைகளுக்கு செயல் வடிவம் கொடுத்துக்கொண்டிருக்கும் கலைஞருக்கு ஆதரவு தர மனமில்லையென்றாலும் வாரி விடாமலாவது இருங்கள்.

மாமா வேலை பார்க்கும் அரசு என்றால் என்ன? பெரு முதலாளிகள் சம்பாதிப்பதற்கு சாதாரண மக்களின் நலன்களை பலிகொடுத்து முதலாளிகளின் ஏஜெண்டாக , மாமாவாக வேலை பார்ப்பது என்பது தான். ஆனால் அசுரரே, நாம் விரும்பினாலும்,விரும்பாவிட்டாலும் உலகில் மாற்றங்கள் வெகுவேகமாக நடந்தேறிக்கொண்டிருக்கின்றன. மாற்றங்களுக்கேற்றவாறு நம்மை மாற்றிக்கொள்ளாவிட்டால் காணாமலே போய்விடுவோம்.

சோசலிச சமூகத்திற்கு அவசிய முன்தேவையாக முதலாளித்துவ வளர்ச்சி இருக்கிறது என்று மார்க்ஸ் சொன்னதை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். இப்போது நிலவி வரும் சூழலை ஏழை,எளிய மக்கள் எப்படி பயன்படுத்திக்கொள்ளலாம் என்று சிந்தித்து பாடுபடுவதே அனைவருக்கும் நன்மை பயக்கும்.

உடன்பிறப்பே, நல்ல செய்தி வந்தேவிட்டது.. !

அமர்க்களமாக நடந்து முடிந்துள்ளது கழக மகளிர் அணி மாநாடு. கடலூரையே கலக்கிய மாநாட்டின் வெற்றி செய்தி வந்துவுடன் அடுத்த நல்ல இனிய செய்தி கழகத்தினர் அனைவருக்கும் கிடைத்திருக்கிறது.

அது தான் பா ம க கூட்டணியில் இருந்து நீக்கப்பட்டது.

கழக உயர்நிலைக்குழு கூடி பா ம க வை தமிழக கூட்டணியில் இருந்து விலக்கி உள்ளது, உள்ளபடியே நம் அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தி.

நட்பு, கூட்டணி என்று சொல்லிகொண்டே, கழக உடன்பிறப்புக்களுக்கு எதிராக செயல்பட்டதும், கழக அரசை அனைத்து விஷயங்களிலும் குறை சொல்லிக்கொண்டும், தலைவரின் அனைத்து அரசியல் முடிவுகளுக்கும் நக்கல் செய்துக்கொண்டும், நல்ல திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட்டும் மலிவான அரசியல் நடத்தி விளம்பரம் தேடிக்கொண்ட டாக்டர் கொய்யா.. அய்யா வின் பா ம க எப்போதோ விலக்கப்பட்டிருக்க வேண்டிய கட்சி.. லேட்டான முடிவு என்றாலும் தலைவர் லேட்டஸ்ட்டான முடிவு எடுத்துள்ளார். நிச்சயம் மருத்துவர் ஆடித்தான் இருப்பார்.


அவருக்கு என்ன 3 வருடத்துக்கு ஒரு கூட்டணியில் இருப்பார்.. அடுத்து ஓடிப்போய் அம்மாவுடன் சேருவார்... உடனடியாக இருக்காது. ஏனெனில் அன்புமனியின் பதவி போய்விடுமே.. 2009 பாராளுமன்ற தேர்தலில் ஓடிவிடுவார்.. ஓடட்டும்..

.... வலம் போனால் என்ன., இடம் போனால் என்ன, மேலே விழுந்து புடுங்காமல் இருந்தா சரி..



Thursday, June 12, 2008

டாக்டர் கலைஞர்: கடலூரில் விழாக்கோலம்

டாக்டர் கலைஞர்: கடலூரில் விழாக்கோலம்

கடலூரில் விழாக்கோலம்



தி மு க வின் இளைஞர் அணி மாநாட்டை தொடர்ந்து இதோ தி மு க வின் மகளிர் அணி முதல் மாநாடு கடலூரில் சனிக்கிழை நடைப்பெற உள்ளது.


கடலூரே விழாக்கோலம் பூண்டுள்ளது. சனிக்கிழமை மாலை நடைபெறும் மகளிர் பேரணியை தனி மேடையில் இருந்து தலைவர் பார்வையிடுகிறார்.
தலைவர் கலைஞரின் வருகையை மகளிரணியினருடன் , கடலூர் மாவட்டமே வழி மேல் விழி வைத்து காத்த்திருக்கிறது.


இந்த மாநாடு, அனைத்து வகையிலும் மாபெரும் வெற்றிபெற்று, தி மு க வரலாற்றில் மேலும் ஒரு சாதனை படைக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

மாநாடு குறித்து தலைவரின் அறிக்கையில் ஒரு பகுதி


மூடத்தனத்தின் முடை நாற்றம் வீசுகின்ற காடு மணக்க வரும் கற்பூரப்பெட்டகமே, வேண்டாத சாதி இருட்டு வெளுப்பதற்குத் தூண்டா விளக்காய் துலக்கும் பெருமாட்டி புண்ணிற் சரம் விடுக்கும், பொய்மதத்தின், கூட்டத்தை க்ண்ணிற் கனல் சிந்திக் கட்டழிக்க வந்தவனே என்ற புரட்சிக்கவிஞரின் பாடலை ஓங்கி ஒலித்து மாதர் கூட்டத்தை அழைக்கிறேன் வா ! வா! மகளிர் மாநாட்டுக்கு
அரசியல் அறிவு மட்டுமல்ல, சமுதாய உணர்வும் பெற்றிட இந்த மாநாடு மலை முகட்டில் ஏற்றி வைக்கும் விளக்கென அமையட்டும்.

என் தங்கைகள் கடலென கூடும் கழக மங்கையர் மாநாடு, வாரீர் , வாரீர்.

மாநாடு முடிந்தவுடன் வழக்கம் போல, சில சோமாறி பத்திரிக்கையாளர்கள் வயிற்றெரிசலில் புலம்பித்தள்ளுவார்கள். சில வலைப்பதிவர்களும் தங்கள் பங்குக்கு குமுறுவார்கள், அங்கலாயத்து போய், அது இது என்று தங்கள் வலைப்பூவில் பதிவாகவும், மற்றும் பின்னூட்டங்களாகவும் கொட்டித்தீர்ப்பார்கள்..

உங்கள் அனைவருக்கும் ஒன்றே ஒன்று.. இப்போதே மருந்துக்கடைகளில் அனுகி ஜெலூசில் வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். மாத்திரையை விட பாட்டிலில் வரும் ஜெலுசில் மருந்து நன்றாக உள்ளது என்று கேள்வி..

மாநாட்டு வெற்றிச்செய்தியுடன் உங்கள் அனைவரையும் மீண்டும் சந்திக்கிறேன்..

நன்றி


Tuesday, June 03, 2008

ரஜினி சொன்ன குட்டிக்கதை!

இந்த கதை நடந்து கிட்டத்தட்ட அறுபது ஆண்டு காலம் இருக்கலாம். காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை, காலில் சக்கரம் கட்டிக்கொண்டு ஓடிக்கொண்டே இருக்கிறது. கூடவே சரிக்கு சமமாக ஓடுபவர்கள் அதிர்ஷ்டசாலிகள். பாதியிலேயே ஓடமுடியாமல் நின்றுவிடுபவர்கள் பாவம். சில பேர் மட்டும் காலத்தின் கால் சக்கர வேகத்தையும் கடந்து ஓய்வு ஒழிச்சலின்றி ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். வரலாறு இவர்களை தான் தன் செல்லப்பிள்ளையாய் தத்தெடுத்துக் கொள்கிறது.

அந்த இரு இளைஞர்களும் இருபதுகளில் இருக்கிறார்கள். எளிமையான தோற்றம். கிராமத்து வாசனை கிஞ்சித்தும் மாறவில்லை. கண்களில் மட்டும் எதிர்காலம் குறித்த ஒரு லட்சம் வாட்ஸ் ஒளி. மெரினா கடற்கரை சாலையில் மகிழ்வாக பேசியபடியே நடக்கிறார்கள். அடுத்த ஐம்பதாண்டுகளுக்கு அவர்களிருவருமே மறந்திருக்க முடியாத மாலை அது. நம்பிக்கையை தவிர்த்து வேறெந்த சொத்து, சுகமும் இல்லாதவர்கள் இருவரும்.

“நண்பா! நம்பிக்கை இருக்கிறது. எப்படியும் ஒரு நாள் இந்த கடற்கரையே என்னை திரும்பிப் பார்க்கும் அளவுக்கு வளருவேன்!”

“நிச்சயமாக நண்பா. நம் சாதனை சாமானியர்களுக்கும் வாழ்க்கை குறித்த நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்!”

“இதே கடற்கரைச் சாலையில் எனக்கு ஒரு சிலை வைக்கப்படும் அளவுக்கு நான் முன்னேற வேண்டும்”

“அந்த சிலையை வைக்கும் அதிகாரத்தில் நான் அமரவேண்டும்”

அந்த நண்பர்களின் வேடிக்கை பேச்சு அரைநூற்றாண்டு கழித்து நனவாகியது. சென்னை கடற்கரை சாலையில் செவாலியே சிவாஜி கணேசன் அவர்களுக்கு சிலை வைக்கப்பட்டது. சிலையை வைத்தவர் தமிழாய் வாழும் தமிழக முதல்வர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர். இந்த கதையை சிவாஜி சிலை திறப்பு விழாவில் சொன்னவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

நடிகர் திலகத்தின் ஆசையை நிறைவேற்றியது மட்டுமல்ல, இன்னும் பல கோடி தமிழர்களின் ஆசைகளையும் தலைவர் கலைஞர் நிறைவேற்ற வேண்டியிருக்கிறது. இதையெல்லாம் செய்ய இன்னும் கூட ஒரு நூறாண்டு போதாது. தமிழ் போல காலமெல்லாம் வாழ்ந்து இயற்கையை வென்று தமிழர்களுக்காக கலைஞர் உழைக்க, வாழும் தமிழ் பிறந்த தினமான இன்று தமிழன்னையை வேண்டுவோம்.